தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிந்தியில் துரந்தர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியில், வரும் மார்ச் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் ரசிகர்கள் மீதான தனது நம்பிக்கை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “துரந்தர் படம் ஐக்கிய அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டபோது அந்த படத்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் பிளைட் பிடித்து இந்தியாவிற்கு கிளம்பி வந்தார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு அங்கே ஐபி டிவியில் பார்க்கும் வசதியும் இருந்தது. ஆனாலும் பெரிய திரையில் கண்டு களிக்க வேண்டும் என அவர்கள் பறந்து வந்தார்கள். அதே எதிர்பார்ப்பு தற்போது துரந்தர் 2 படத்திற்கும் உருவாகியுள்ளது. நிறைய பேர் தங்களது வியாபார சந்திப்புகளை மார்ச் 19ம் தேதியை சுற்றி திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். துரந்தர் 2 படத்தை பார்க்கவும் தங்களது சந்திப்பை நிகழ்த்தவும்” என்று கூறியுள்ளார்.