உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு

சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு


சமீப காலமாகவே சில படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து சர்ச்சையும் விவாதமும் எழுந்துள்ளது. குறிப்பாக விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இப்போது வரை சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கலை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பரபரப்பான சூழல்களுக்கு நடுவே 'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் வெளியானது. கடந்த சில வருடங்களுக்கு முன் இதன் முதல் பாகம் வெளியான சமயத்திலேயே எதிர்ப்பை சந்தித்து தான் வெளியானது. சில மாநிலங்களில் படம் வெளியாகவில்லை,

இந்த இரண்டாம் பாகத்தையும் கேரளாவில் வெளியிட தடை விதிக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த படம் நேற்று வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தான் கேரள ஸ்டோரி முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சுதிப்தோ சென் கூறும்போது, “சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறது. 'அனிமல், துரந்தர்' போன்ற வன்முறையை ஆராதிக்கும் படங்களை கண்டுகொள்ளாமல் எந்த கெடுபடியும் காட்டாமல் சான்றிதழ் வழங்குகிறது. ஆனால் நிஜமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்படும் படங்களை தனி முத்திரை குத்தி அவற்றிற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் பாகுபாடு காட்டி வருகிறது. ஒவ்வொரு இயக்குனரும் தொடர்ந்து படைப்பு சுதந்திரம் குறித்தும் சென்சாரின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்தும் உரக்க குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !