பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது
ஏவிஎம் நிறுவனத்தில் ஏவிஎம் சரவணன் தயாரிப்பு நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக 'மாமியார் மெச்சிய மருமகள்' என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த படத்தை வெள்ளி விழா படமாக எடுத்து ஜெயிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். இதற்காக நூற்றுக் கணக்கான கதைகள் கேட்டார். கங்கை அமரன் ஒரு கதை சொல்லி அது ஓகே செய்யப்பட்டது. ஆனால் அந்த படம் நல்லபடமாக வரும், ஆனால் வெள்ளி விழா வரைக்கும் வராது என்று கணித்த சரவணன், அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்.
ஒரு நாள் காலையில் பேப்பர் படிக்கும்போது சித்ராலயா கோபு எழுதிய 'பட்டம் பறக்கட்டும்' என்ற நாடகத்தை ஒரு முன்னணி தொலைக்காட்சி நிராகரித்த செய்தி இருந்தது. இதை படித்ததும் சித்ராலயா கோபுவை தன் அலுவலத்திற்கு அழைத்து கதை கேட்டார். 'லப் பக்' என்ற ஆங்கில படத்தை தழுவி அந்த நாடகம் எழுதப்பட்டிருந்தது. இந்த கதை வெள்ளி விழா கொண்டாடும் என்று நம்பினார். அதற்கு முதல் தேவை இதில் மனோரமா நடிக்க வேண்டும் என்று கருதினார். மனோரமாவே எதிர்பார்க்காத ஒரு பெரும் சம்பளத்தை அவருக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்தார். பாட்டி, பேரன் பாசக் கதை என்பதால் பேரனாக பாண்டியராஜனை ஒப்பந்தம் செய்தார்.
படத்தில் மனோரமாவுக்கு சண்டை காட்சி வைத்தார். அதோடு தானாகவே இரண்டாக பிரியும் ஒரு காரை வடிவமைத்து அந்த காரும் ஒரு கேரக்டராக படம் முழுக்க வலம் வந்தது. படம் வெளியான பிறகு தியேட்டர் தியேட்டராக வலம் வந்தது. 'பாட்டி சொல்லை தட்டாதே' படம் வெள்ளி விழா கொண்டாடியது. ஏவிஎம் நிறுவனத்தின் மைல்கல் படமானது.