பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம்
இப்போதெல்லாம் ராணுவ முகாம்களில் படம் எடுப்பதற்கான அனுமதியை பெறுவது எளிதானது. படத்தின் ஸ்கிரிப்டை கொடுக்க வேண்டும். அது ராணுவத்தின் நன்மதிப்பை கெடுக்காதவாறு இருந்தால் அனுமதி கொடுக்கப்படும், கட்டணமாக பெரும் தொகை வசூலிக்கப்படும். ஆனால் ராணுவ முகாம்களில் படப்பிடிப்பு நடத்தவே முடியாத காலத்தில் தியாகராஜன் 'பூவுக்குள் பூகம்பம்' என்ற படத்தை நிஜமான ராணுவ முகாம்களிலேயே நடத்தினார்.
நடிகராக இருந்த தியாகராஜன் இயக்குனராக அறிமுகமான படம் இது. 1980களில் இந்திய ராணுவ தளபதியாக இருந்த சுந்தர்ஜியின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவானது. இதில் தியாகராஜன், பார்வதி, சரோஜாதேவி, சேரன்ராஜ், ஜனகராஜ், செந்தில், சில்க்ஸ்மிதா, ஜெயமாலினி, சங்கீதா, சுஜிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆக்ரா அருகே உள்ள பைசாபாத்தில் இருந்த ராணுவ முகாமில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக 6 மாதம் வரை போராடி அனுமதி பெற்றிருந்தார் தியாகராஜன், படத்திற்காக 3500 ராணுவ வீரர்கள் தனியாக அணிவகுப்பு நடத்தினார்கள். சில காட்சிகளில் நடிக்கவும் செய்தார்கள்.
ஸ்ரீநகர், ஆக்ரா, சென்னையில் உள்ள ராணுவ முகாம்களிலும் படப்பிடிப்பு நடந்தது. ராணுவ வீரனை திருமணம் செய்து கொள்ளும் பூப்போன்ற மென்மையான பெண் அவனை எப்படி புரிந்து கொள்கிறாள். கனவனுக்காக அவளும் எப்படி பூகம்பமாக மாறுகிறாள் என்பதுதான் படத்தின் கதை. பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி இருந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.