8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா?
2020ம் ஆண்டு கொரானோ தாக்கம் வந்த போது ஓடிடி தளங்களில் இந்தியாவில் திடீர் வளர்ச்சியைப் பெற்றன. அப்போது தியேட்டர்கள் மூடப்பட்டதால் முன்னணி நடிகர்களின் படங்கள் கூடி ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்பட்டன. அடுத்த ஓரிரு ஆண்டுகள் மட்டுமே அது தொடர்ந்தது. அதே சமயம் 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய படங்களைப் பார்ப்பதும், புதுப் புது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர ஆரம்பித்தன. அதனால், ஓடிடி உரிமை என்பது நல்ல விலைக்கு வாங்கப்பட்டு அது தயாரிப்பாளர்களுக்குப் பேருதவியாக இருந்தது.
தியேட்டர்களில் ஓரளவிற்கு ஓடும் படங்களை வெளியீட்டிற்குப் பின்பும் உரிமை பெற்று ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள். மிக மோசமான வரவேற்பைப் பெற்ற படங்களை மட்டுமே அந்நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை. ஓடிடி உரிமை மூலம் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவில் 50 சதவீதமாவது தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்துவிடும். வெற்றிகரமான சில சிறிய படங்கள் மொத்த செலவையும் ஓடிடி உரிமை மூலமே பெற்றுவிடும் அளவிற்கு வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் 4 வாரங்களில் ஓடிடி வெளியீடு என்பது தியேட்டர் வசூலைப் பாதிக்கிறது, மக்கள் வருகை குறைந்துவிட்டது என தியேட்டர்காரர்கள் தற்போது புதிய முடிவு எடுத்துள்ளார்கள். இரு நாட்களுக்கு முன்பு தென்னிந்திய தியேட்டர் சங்கத்தின் கூட்டுக் குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அதில் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி வெளியீடு இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
8 வார இடைவெளியில் ஓடிடி வெளியீடு என்றால் ஓடிடி நிறுவனங்கள் அதன் விலையை வெகுவாகக் குறைத்துவிட வாய்ப்புகள் அதிகம். மேலும் அனைத்துப் படங்களுக்கும் சரியான தியேட்டர்கள் கிடைப்பதில்லை. பெயருக்கு தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு பின் அதை வைத்து ஓடிடி வெளியீட்டிற்கான உரிய தொகையை தயாரிப்பாளர்கள் பெற்று வந்தார்கள். 8 வார இடைவெளி என்ற அழுத்தத்தை தியேட்டர்காரர்கள் கொடுத்தால் அனைத்து படங்களுக்கும் உரிய விதத்தில் தியேட்டர்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் முன் வைப்பார்கள்.
பல படங்களுக்கு சரியான தியேட்டர்களும், அதிக காட்சிகளும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை தயாரிப்பாளர்கள் கடந்த சில வருடங்களாகவே முன் வைத்து வருகிறார்கள். வாரத்திற்கு நான்கைந்து படங்கள் தமிழில் வெளிவருகின்றன. அவற்றில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைக்கின்றன. மற்ற படங்களுக்கு ஒரே ஒரு காட்சியோ அல்லது காலை காட்சியோ மட்டும்தான் கிடைக்கின்றன. அவற்றை வைத்து ஒரு தயாரிப்பாளர் தங்களது படங்களின் வசூலைப் பெற்றுவிட முடியாது.
தென்னிந்திய அளவில் தியேட்டர் சங்கத்தினர் கூடிப் பேசியதைப் போல, தயாரிப்பாளர் சங்கத்தினர் விரைவில் கூடிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பும் கூடிப் பேசினால் மட்டுமே இதற்கான சரியான, நியாயமான தீர்வு கிடைக்கும் என்று திரையுலகின் அனுபவசாலிகள் தெரிவிக்கிறார்கள்.