பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்'
மக்கள் திலகம் எம்ஜிஆரின் டாப் 5 படங்களில் ஒன்று 'நாடோடி மன்னன்'. அன்றைக்கிருந்த நடிகர்களில் அதிகமான ஆங்கில படங்களை பார்ப்பதும், அதன் சாயலில் தனது படங்களின் கதையை வைத்துக் கொள்வதும் அவரது பாணியாக இருந்தது. ஆனால் அவர் அந்த படத்தின் கதையை, நடிப்பு ஸ்டைலை எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து எடுத்தார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. காரணம் அதை அவர் முற்றிலுமாக தனது ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியிருப்பார்.
பிராங் லாயிட் இயக்கிய 'இப் ஐ வேர் கிங்' என்ற படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு அது போல படம் பண்ண ஆசை வந்தது. இதை அவரது ஆலோசகர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் படத்தை பார்த்துவிட்டு பிரமாதமாக இருக்கிறது. உங்களுக்கு ஏற்ற கதை என்று சொன்னார்கள். அதன் பிறகு ஒரு நாள் ரிச்சர்ட் தோர்பே-வின் 'தி பிரிசனர் ஆப் ஜெண்டா' படத்தை பார்க்க சொன்னார். அவர்களும் பார்த்து விட்டு இந்த படத்தையும் நாம் எடுக்கலாம் என்றார்கள். சில நாட்களுக்கு பிறகு மார்லன் பிராண்டோ நடித்த 'விவா ஸபாடா' படத்தையும் பார்க்கச் சொன்னார். இதையும் பிரமாதம் என்றார்கள்.
இந்த 3 படத்தின் கதைகளையும் இணைத்து ஒரே கதையாக்குங்கள் என்று கூறி அதற்கான ஒன் லைனையும் சொன்னார். இதை டெவலப் பண்ணி திரைக்கதை எழுதுங்கள் என்றார். அதுதான் 'நாடோடி மன்னன்'. முழுமையான ஸ்கிரிப்டை படித்த எம்ஜிஆர் அதனை தானே இயக்கவும் முடிவு செய்தார்.
2 வேடங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க, பானுமதி, எம்.என்.ராஜம், சரோஜாதேவி, வீரப்பா, நம்பியார், சந்திரபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்தது. சரோஜாதேவி நாயகியாக அறிமுகமான படம் இது. படத்தின் முதல் பாதி கருப்பு வெள்ளையிலும் பிற்பகுதி கதையை கேவாகலரிலும் படமாக்கினார்கள். எம்ஜிஆரின் திரைவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்த படம் இது.