பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர்
கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற ‛காந்தாரா' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் காஷ்யப். இந்த இரண்டு பாகங்களுக்கான இடைவெளியில் மலையாளத்தில் வெளியான துல்கர் சல்மான் நடித்த ‛கிங் ஆப் கொத்த' மற்றும் பிரித்விராஜ் நடித்த ‛விலாயத் புத்தா' ஆகிய படங்களிலும் பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 111வது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் அரவிந்த் காஷ்யப்.
இது குறித்து அவர் கூறும்போது, “காந்தாரா படத்திற்கு பிறகு என்னை தேடி வந்த படங்களின் இயக்குனர்கள் எல்லாமே காடுகளின் பின்னணியில் உள்ள கதைகளை கொண்டு வந்தார்கள். காந்தாரா படத்தில் காடுகள் கதைக்களமாக இருந்ததால் அதேபோன்ற பின்னணியில் நான் ஸ்பெஷலிஸ்ட் என நினைத்துக் கொண்டே அப்படி தேடி வந்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் நான் மறுத்து விட்டேன். தற்போது பாலகிருஷ்ணா உடன் நான் பணியாற்றி வரும் படம் காந்தாரா கதைக்களத்திற்கு அப்படியே முற்றிலும் மாறானது.
இந்த படத்தின் படப்பிடிப்பில் பாலகிருஷ்ணாவை, அவரது எனர்ஜியை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. எந்த ஒரு ஷாட்டுக்கும் இடையில் அவர் கேரவனை நோக்கி போகாமல் படப்பிடிப்பு தளத்திலேயே அமர்ந்தபடி கவனித்துக் கொண்டிருப்பார். அவரை பார்ப்பவர்களுக்கு இன்னும் தங்களது பணியில் ரொம்பவே சின்சியராக இருக்க வேண்டும் என்கிற இயல்பான பயம் தானாகவே ஏற்பட்டுவிடும். இன்னும் கூட அவரிடம் போய் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்பதற்கு பயந்து கொண்டே இருக்கிறேன். ஆனால் நிச்சயமாக ஒரு நாள் அதை செய்வேன்” என்று கூறியுள்ளார்.