உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித்

பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான படம் ரெட். இந்த படத்தின் மூலம் சுந்தர்.சி மற்றும் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிங்கம்புலி, ராம் சத்யா என்கிற பெயரில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் பணியாற்றிய போது அவருக்கு அஜித்துக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது எந்த அளவிற்கு என்றால் 2007ல் அஜித் தான் பில்லா படத்தில் நடித்தபோது சிங்கம்புலியையும் தன்னுடன் மலேசியா படப்பிடிப்பிற்கு உடன் அழைத்துச் செல்லும் அளவிற்கு நெருக்கமான நட்பாக இருந்தது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சிங்கம்புலி கூறும்போது, “திடீரென ஒரு நாள் அஜித் சார் உங்களை பில்லா படபிடிப்பிற்காக மலேசியா கிளம்பி வரச் சொல்கிறார் என்று தகவல் வந்தது. நடிப்பதற்காகவா என்று கேட்டேன். அது சஸ்பென்ஸ் என்றார்கள். ஆனால் அங்கே மலேசியா சென்றதும் தான் அஜித் என்னுடன் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு, தான் நடிக்கும் காட்சிகள் பற்றி விவரித்துக் கொண்டு, அது பற்றிய சில ஐடியாக்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டு என 30 நாட்கள் என்னை தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.

இத்தனைக்கும் அந்த படத்தில் ஒரு தொழில்நுட்ப கலைஞராகவோ நடிகராகவோ நான் பணியாற்றவில்லை. ஆனால் 30 நாட்கள் முடிந்ததும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எனக்காக ஒரு கணிசமான தொகையையும் சம்பளமாக பெற்றுத் தந்தார். அந்த அளவிற்கு என் மீது அவர் அன்பும் நன்மதிப்பும் வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார் சிங்கம்புலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !