கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய்
சில வருடங்கள் முன்பு வரை நடிகர் ஜெய் நடித்த படங்கள் பெரிய எண்ணிக்கையில் வெளியாகவில்லை. அதே சமயம் தற்போது அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது இயக்குனர் சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். கிரைம் திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் ஒரு கூர்க்கா கதாபாத்திரத்தில் ஜெய் நடிக்க இருக்கிறாராம்.
ஆச்சரியமாக இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக கதாநாயகியும் இல்லை. அதேபோல படத்தில் பாடல்களும் இல்லை என்ற தகவலை கூறியிருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். இந்த கதையை கேட்ட பல தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் கதாநாயகி இல்லாதது குறித்தும் கேட்டபோது இந்த படத்திற்கு அவை தேவைப்படவில்லை என்பதை உறுதியுடன் சொன்னேன். நடிகர் ஜெய் அதை புரிந்து கொண்டார் என்று கூறியுள்ளார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். வரும் மே மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.