துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு
ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், சஞ்சய் தத், மாதவன், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் துரந்தர் 2. முதல் பாகத்தை விட இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபல இயக்குனர்கள் ஷங்கர், ராஜமவுலி உள்ளிட்ட பலரும் இந்த படத்தை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்கள். இப்படம் திரைக்கு வந்து 4 நாட்களில் 761 கோடி வசூலித்து இருக்கிறது.
இந்நிலையில் துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நேரத்தில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதனால் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விசாரணை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதன்பிறகே துரந்தர் 2 படம் தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.