பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…!
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ நடிக்க வேண்டிய படம் இன்னொரு ஹீரோ பக்கம் போவது எல்லாம் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். அந்த ஹீரோவுக்கு கதை பிடிக்கவில்லை அல்லது சம்பளம் செட்டாகவில்லை போன்ற சில விஷயங்கள்தான் அதற்குக் காரணமாக இருக்கும். அதன் பின்புதான் வேறு ஹீரோ பக்கம் இயக்குனரும், தயாரிப்பாளரும் போவார்கள்.
ஆனால், பிரசாந்த்தை நடிக்க வைக்க முடிவு செய்து வைத்திருந்த ஒரு படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அதில் தனது மகன் விஜய் நடிக்க வேண்டும் என்று தேடிப் போய் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்திருக்கிறார் விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். இது பற்றிய தகவலை விஜய்யின் முன்னாள் மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா மற்றும் பலர் நடிக்க 1996ம் ஆண்டு வெளிவந்து 250 நாட்களுக்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றிப் படம் 'பூவே உனக்காக'. இரண்டு குடும்பங்களின் பின்னணியில் ஒரு அழகான, அருமையான காதல் திரைப்படமாக வெளிவந்த படம். விஜய்க்கு குடும்பத்து ரசிகர்களை, குறிப்பான பெண் ரசிகைகளை அதிகம் பெற்றுத் தந்த படம் இது. அதற்கு முன்பு வரை 'ஏடாகூடமான' காட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வேறு மாதிரியான 'இமேஜ்' வைத்திருந்த விஜய்யின் 'இமேஜ்'ஐ முற்றிலும் மாற்றிய படம் இது.
இப்படத்தில் பிரசாந்த் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம். அந்த வாய்ப்பு விஜய் பக்கம் போனது எப்படி என்பது குறித்து பி.டி.செல்வகுமார் கூறியிருக்கிறார். 'பூவே உனக்காக' படத்தைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரியை அப்படம் பேச்சுவார்த்தையில் இருந்த சமயத்தில் சந்தித்திருக்கிறார். அப்போது படத்தின் கதை பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள். கதை நன்றாக இருந்ததும் உடனே விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கு போன் செய்து தகவலை சொல்லியிருக்கிறார். அவரும் உடனே வந்து சவுத்ரியைப் பார்த்து, சம்பளம் பற்றி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம், உங்களது கம்பெனியில் எனது மகன் நடிக்க வேண்டும் என்று சொல்லி விஜய்யை நடிக்க வைத்தாராம். பிரசாந்த் பெயரில் எழுதி வைத்திருந்த செக்கை எல்லாம் கிழித்து போட்டுவிட்டுத்தான் விஜய்யை புக் செய்தார்களாம்.
பி.டி.செல்வகுமார் கூறியது உண்மைதானா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, படத்தின் இயக்குனர் விக்ரமன், விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர்தான் சொல்ல வேண்டும்.