5 மணிநேரம் ரசிகர்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்த மம்முட்டி
தங்களது படங்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என பிரபல ஹீரோக்கள் நினைத்தாலும் கூட ரசிகர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களை சந்திப்பதும் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் என்பது ரொம்பவே அரிதான ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அப்படி ஐந்து நாட்கள் தினசரி நேரம் ஒதுக்கி ஆயிரக்கணக்கில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதை எடுத்து தற்போது நடிகர் மம்முட்டி தனது ரசிகர்களை சந்தித்து கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் செலவிட்டு அவர்களுடன் ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்வித்துள்ளார்.
நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள போல்ட் காட்டி பேலஸில் இந்த ரசிகர் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மம்முட்டி செய்து இருந்தார். இதில் இளைஞர்கள், வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் என மம்முட்டியின் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பத்தினம் திட்டா, எர்ணாகுளம் திருச்சூர், ஆலப்புழா, கோழிக்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று மம்முட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மம்முட்டியும் எந்தவித சோர்வும் அசவுகரியமும் இன்றி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தார். இது குறித்த புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.