உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதவி செய்யுங்கள் : துரந்தர் படக்குழுவுக்கு பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை

உதவி செய்யுங்கள் : துரந்தர் படக்குழுவுக்கு பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை

கடந்த டிசம்பர் மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான துரந்தர் மற்றும் சமீபத்தில் வெளியான அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 என இரண்டு பாகங்களும் ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றன. இந்திய உளவாளி ஒருவர் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக தன்னை பொருத்திக் கொண்டு இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக சிரமங்களை சந்திப்பது தான் படத்தின் கதை.

இதில் அந்த உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த ரன்வீர் சிங் தங்கியிருக்கும் நகரமாக பாகிஸ்தானின் மிக முக்கிய நகரமான கராச்சியில் உள்ள லயாரி இடம் பிடித்திருந்தது. சொல்லப்போனால் இந்த படத்தின் கதைக்களமே இந்த லயாரி நகரம் தான். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள லயாரி நகரத்தை சேர்ந்த மக்கள் பலரும் சோசியல் மீடியா மூலமாக துரந்தர் படக்குழுவிற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது, எங்களுடைய லயாரி நகரத்தை மையப்படுத்தியே உங்களது கதைக்களம் இருந்தது, அதனால் படத்தின் லாபத்தில் எங்களது நகரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பங்கு தர வேண்டும் என்று சிலரும், இன்னும் சிலர் உங்கள் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி எங்கள் நகரத்திற்கு தேவையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள். வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்குவதில் தான் பாகிஸ்தான் மும்முரமாக இருக்கிறதே தவிர, எங்களுக்கான எந்த வசதிகளையும் செய்ய தயாராக இல்லை என்றும் கோரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

துரந்தர் படக்குழுவினர் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !