பிளாஷ்பேக் : தான் நடிக்க முடியாத படத்திற்கு உதவிய எம்ஜிஆர்
1947ம் ஆண்டு வி.சாந்தாராம் மராத்தி மொழியில் 'லோக்சாஹிர் ராம் ஜோஷி' என்ற தலைப்பிலும், ஹிந்தி மொழியில் 'மத்வாலா ஷயர் ராம் ஜோஷி' என்ற தலைப்பிலும் உருவாக்கிய திரைப்படங்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் தயாரான படம் 'ஜெயபேரி'. இந்தப் படம் அங்கு பெரிய வெற்றியை பெற்றது.
பின்னர் இந்தப் படம் 'கலைவாணன்' என்ற பெயரில் தமிழில் தயாரானது. பி.புல்லையா இயக்கினார். ஏ. நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இவர்கள் தவிர பெரும்பாலும் தெலுங்கு நடிகர்களே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை வாங்க தமிழ்நாட்டில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தயாரிப்புக்கு முதலீடு செய்த டி. வி. எஸ். பிரதிபா சாஸ்திரி தனது நண்பரான எம். ஜி.ஆரை அணுகினார். தமிழ் படம் தயாரிப்பில் இருந்ததால் தெலுங்குப் படத்தை எம். ஜி. ஆருக்கு போட்டு காட்டினார் . ஜாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்கும், கலைக்கு எல்லைகள் ஏதுமில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்த இந்த படம் எம்ஜிஆருக்கு பிடித்து விட்டது. என்னை வைத்து இந்த படத்தை தயாரியுங்கள் நான் நடித்து தருகிறேன் என்றார். ஆனால் ஏற்கெனவே ஏ. நாகேஸ்வர ராவை வைத்து தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டு வருவதை பிரதிபா சாஸ்திரி சொன்னதும், அதனால் என்ன பரவாயில்லை அவரும் பெரிய நடிகர்தானே என்று சொன்ன எம்ஜிஆர் தனக்குத் தெரிந்த விநியோகஸ்தர்களை அழைத்து படத்தை வாங்க வைத்தார்.
'கலைவாணன்' பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் எம்.ஜி.ஆரின் தலையீட்டால் தயாரிப்பாளர் நஷ்டத்தில் இருந்து தப்பினார்.
விஸ்வநாதனும் அவர் மனைவி பார்வதியும் விஸ்வநாதனின் தம்பி காசிநாத்தை தங்கள் பிள்ளையாக வளர்த்து வருகின்றனர். காசிநாத் இசை பயின்று சிறந்த இசைக் கலைஞன் ஆகிறான். அவர்களது ஊருக்கு ஒரு இசை நடனக் குழு வருகிறது. அக்குழுவில் மாலா என்ற பெண் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவள். அவளோடு காசிநாத் போட்டி போட்டு அவளை வெல்கிறான். ஆனால் தாழ்ந்த ஜாதிப் பெண்ணோடு ஒரே மேடையில் பாடியதால் காசிநாத்தை அவனது குரு விலக்கி விடுகிறார். இசைக்கும் கலைகளுக்கும் எந்த பேதமும் கிடையாது என காசிநாத் வாதாடுகிறான். ஆனால் ஊர் தர்மாதிகாரி தீர்ப்புப்படி காசிநாத்தை அண்ணன் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்.
காசிநாத் மாலாவை திருமணம் செய்கிறான். இருவரும் பல இடங்களில் மக்களுக்கு இசை நடன விருந்தளிக்கின்றனர். அந்நாட்டு அரசன் தனது அரசவைக் கலைஞனாக காசிநாத்தை நியமிக்கிறான். இது தர்மாதிகாரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அரண்மனை நாட்டியக்காரியான அமிர்தத்துடன் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார். அமிர்தம் காசிநாத்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகிறாள். அவன் குடிகாரனாகிவிட்டதால் அரண்மனையை விட்டு வெளியேற்றுமாறு மன்னனுக்கு அமிர்தம் சொல்கிறாள். காசிநாத்தின் தாய் போன்ற அண்ணி பார்வதி தன் கணவனின் கோபத்தையும் பொருட்படுத்தாமல் எவ்வாறு காசிநாத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருகிறாள் என்பதே 'கலைவாணன்' படத்தின் கதை.