ஓட்டுப்பதிவை ஓரங்கட்டிய திரைப்பிரபலங்கள்....
தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. விஜய் புதிதாக தேர்தல் களத்திற்கு வந்துள்ளதால் இந்த முறை அதிக ஓட்டு பதிவாகி உள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் இந்தாண்டு தான் அதிக ஓட்டு பதிவாகி இருக்கிறது. எப்படியும் 90 சதவீத ஓட்டு அல்லது அதற்கு மேல் பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் அநேக திரையுலக பிரமுகர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர். இருப்பினும் சில திரையுலகினர் தங்களது ஜனநாயக கடமையை கூட செய்யவில்லை.
இந்த தேர்தலில் இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், கவுதம் மேனன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், நடிகைகள் நயன்தாரா, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் ஓட்டு போடவில்லை. நடிகர்கள் ஆர்யா, கார்த்திக் ஓட்டு அளிக்கவில்லை. கவுண்டமணி, செந்திலும் ஓட்டுப் போட்டதாக தகவல் இல்லை. பாரதிராஜா, கவுண்டமணி போன்றோர் உடல்சுகவீனம் காரணமாக ஓட்டு போடவில்லையாம். அதேசமயம் அவர்கள் தபால் ஓட்டு போட்டிருக்க வாய்ப்புள்ளது.
திரைப்பிரபலங்களின் ஓட்டு பதிவு ஹைலைட்
* சென்னை திருவான்மியூர் ஓட்டு சாவடியில் முதல் சினிமா பிரமுகராக வந்து ஓட்டு போட்டார் அஜித். இந்தமுறை ஒயிட் கோட்டில் வந்தார். ஓட்டுபோட்டு முடிந்தவுடன் கடைசியில் கையை குவித்து ஹார்ட்டின் காண்பித்து விடை பெற்றார். அவர் மாற்றம் குறித்து பேசியதாக தகவல் பரவ, அவர் அப்படி பேசவே இல்லை என்று அவர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆக, அஜித் பேசாவிட்டாலும் இந்த தேர்தலில் பேசு பொருள் ஆனார்.
* இந்த தேர்தலில் கடைசி சினிமா பிரபலமாக வந்து ஓட்டுபோட்டவர் ரவிமோகன். காலையில் அவர் தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதியில் இருந்தார். பின்னர் அங்கிருந்து வந்து ஆழ்வார்பேட்டை தொகுதியில் ஓட்டு அளித்தார்.
* விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் நடந்து வந்தது. அங்கே இருந்து சென்னை வந்த விஷால், சென்னை அண்ணாநகர் வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து ஓட்டுபோட்டார். அண்ணாநகர் செழிப்பாக இல்லை. நிறைய பிரச்னைகள் இருக்கிறது. அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என கொளுத்திபோட்டார்.
* இந்த தேர்தலில் சீனியர் நடிகையாக ஓட்டு போட்டவர் சச்சு.
* வெளிநாட்டில் படித்து வந்ததால் முதன்முறையாக இந்த தேர்தலில்தான் ஓட்டுபோட்டாராம் விக்ரம் மகன் துருவ்.
* விஜய், அஜித், விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜெய் என நடிகர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், சூர்யா, ஆதி, அர்ஜூன், சரத்குமார், பிரசன்னா, ஆகியோர் தங்கள் மனைவியுடன் வந்து ஓட்டுபோட்டனர்.
* ''யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் அகற்றப்பட வேண்டும். 40 சதவீதம் பேர் குடிக்கு அடிமை ஆகிவிட்டார்கள். குடும்பத்துக்கு சேர்ப்பதை தவிர்த்து கடைக்கோடி மக்களுக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும்'' என்று ஓட்டு போட்டபின் அதிரடியாக பேட்டி கொடுத்தார் நடிகர் சிவக்குமார்.
* ஹீரோயின்களில் திரிஷாவை பார்க்கதான் கூட்டம் அதிகமாக கூடியது. மீடியாவும் அதிகம். ஆனால், அவர் அம்மாவுடன் வந்து ஓட்டுபோட்டு விட்டு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் கீர்த்தி சுரேஷ் ஓட்டு போட்டுவிட்டு அரசியல் உட்பட எதுவும் பேசவில்லை. ஹீரோயின்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ஷங்கர், சிம்ரன், ரம்யா பாண்டியன், வரலட்சுமி உட்பட பலரும் ஓட்டு போட்டனர்.
* இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெங்கட்பிரபு, அட்லி உள்ளிட்டவர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்தனர். மற்ற ஹீரோக்களில் அதர்வா, ஷாம், அருண் விஜய், ஹரிஷ் கல்யாண், ஜி.வி.பிரகாஷ், பிரதீப் ரங்கநாதன், சித்தார்த், சூரி, பரத், பார்த்திபன், சிபிராஜ் உள்ளிட்டவர்களும் ஓட்டு போட்டனர்.
* கமலுடன் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் வந்து ஓட்டுபோட்டார். அக்ஷரா வரவில்லை. அவருக்கு இங்கு ஓட்டு இல்லை. மும்பையில் இருக்கிறது என கூறப்படுகிறது. காமெடி நடிகர்களின் சந்தானம், யோகிபாபு, சின்னிஜெயந்த், புகழ் ஓட்டு போட்டனர்.
* இசையமைப்பாளர் இளையராஜா வழக்கம்போல் ஜனநாயக கடமை ஆற்றினார். அணைக்கட்டு தொகுதியில் ஓட்டு போட்டார் 'ஜனநாயகன்' பட இயக்குனர் எச்.வினோத்.