பிளாஷ்பேக்: நிஜ சம்பவத்தை தழுவிய கிரைம் திரில்லர்
லட்சுமி காந்தன் கொலை வழக்கு போன்று 'கருங்குழி பார்சல் கொலை வழக்கு' என்பதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கொலை வழக்கை தழுவி எஸ்.ஏ.சாமி 'கருங்குயில் குன்றத்து கொலை வழக்கு' என்ற நாவலை எழுதினார். இந்த நாவல்தான் 'மரகதம்' என்ற பெயரில் திரைப்படமானது.
இதில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். பாலச்சந்தர், சந்தியா, டி.எஸ். பாலையா, டி.எஸ். துரைராஜ், ஜே.பி. சந்திரபாபு, ஓ.ஏ.கே. தேவர், பி.எஸ். ஞானம், டி.பி. முத்துலட்சுமி, லட்சுமிராஜம், லட்சுமிபிரபா, எம்.ஆர். சந்தானம், 'என்னத்தே' கண்ணையா மற்றும் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இப்படத்தை இயக்கியிருந்தார். கோவையில் அமைந்திருந்த அவரது 'பக்ஷிராஜா' ஸ்டூடியோவில் படமானது.
கருங்குயில் குன்றத்து ஜமீன் கொலை செய்யப்படுகிறார். இந்த பழி அவரது மருமகன் வீணை பாலச்சந்தர் மீது விழுகிறது. அவர் சிறைக்கு செல்கிறார். பின்னர் அவர் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க சிறையில் இருந்து தப்பிக்கிறார். அவரது மனைவி சந்தியா (ஜெயலலிதாவின் தாய்), மகள் பத்மினி ஆகியோர் திசைக்கு ஒருவராக பிரிகிறார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து ஜமீனை கொன்றது யார் என்பதை ஜமீனின் இளவரசன் சிவாஜி கண்டுபிடிப்பதுதான் கதை.
காதலால் உருகும் சமையல்காரராக சந்திரபாபு நடித்த காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது. சந்திரபாபுவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே' என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றதுதான்.