'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல்
புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 4ம் தேதி வெளியாக உள்ள தெலுங்குப் படம் 'பெத்தி'.
இப்படத்திற்கு தெலுங்கானா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மூலம் தற்போது புதிய சிக்கல் வந்துள்ளது. தெலுங்கானா சிங்கிள் தியேட்டர்களில் இப்படத்தை சதவீதப் பங்கு அடிப்படையில் மட்டுமே வெளியிடுவோம் என நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்துத் தெரிவித்துள்ளார்கள். மேலும், தெலுங்கானா அரசுக்கு இப்படத்திற்காக சிறப்புக் கட்டண உயர்வைத் தரக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே இந்த சதவீதப் பங்கு விவகாரத்தில் மோதல் போக்கு இருந்து வருகிறது. அதையடுத்து தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தி சொல்வதற்கு முன்பாகவே இப்படி ஒரு நிலையை தியேட்டர்கள் சங்கத்தினர் எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் எப்படி தீர்க்கப் போகிறது என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.