நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில், சில மாதங்களிலேயே துரந்தர் படத்தின் இரண்டு பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றன. ஆனால், அந்த சந்தோஷத்தை அவரால் முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில், அவர் 'காந்தாரா' படம் குறித்து சர்ச்சையாகப் பேசியதற்காக நீதிமன்றம் அவரைக் கண்டித்தது. அதற்காக மன்னிப்பு கேட்டு மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று வந்தார் ரன்வீர் சிங்.
இன்னொரு பக்கம், அவர் 'டான் 3' படத்தில் நடிப்பதற்கு இசைவு தெரிவித்து, அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடக்கும்போது அதிலிருந்து திடீரென விலகினார். இதனால் படத்தின் தயாரிப்பாளர்களான ரிதேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோர் தங்களுக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்கள். இவர்களுக்கு ஆதரவாக பாலிவுட்டில் செயல்பட்டு வரும் மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ரன்வீர் சிங் பணிபுரியும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என அறிவித்தது.
இந்த கூட்டமைப்பின் முடிவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ரன்வீர் சிங் அவர்களுக்கு இது குறித்து சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கில்டு அமைப்பு ஆகியவை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ரன்வீர் சிங் மீதான தடையைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது இந்தக் கூட்டமைப்பு. ரன்வீர் சிங் தனது எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாகவே இது நடந்துள்ளது என பாலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசப்படுகிறது.