வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வோம் : வெற்றி பெற்ற சேரன் பேட்டி
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு இயக்குனர் சேரனும், ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதனும் போட்டியிட்டனர். துணை தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் என மொத்தம் உள்ள 21 பொறுப்புகளுக்கு இரு அணிகள் சார்பாகவும் போட்டியிட்டனர். சங்கத்தில் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில், 483 பேர் ஓட்டளிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தேர்தல் முடிவில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பில் போட்டியிட்ட சேரன், அதிக ஓட்டுகள் பெற்று தலைவராக தேர்வானார். துணை தலைவர்களாக சேரன் அணியை சேர்ந்த சமுத்திரகனி, சினேகன், செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், நான்கு இணைச் செயலாளர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 'திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ்' அணியைச் சேர்ந்த கவிஞர் முத்துலிங்கம், வி. பிரபாகர், எஸ்.ரவி மரியா ஆகியோரும், 'நம்ம கே. பாக்யராஜ்' அணியைச் சேர்ந்த பாஸ்கர் சக்தி வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவியில், 'நம்ம கே. பாக்யராஜ்' அணியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார்.
வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைவர் சேரன், இந்தத் தேர்தலில் உண்மையில் வெற்றி பெற்றவர் இயக்குநர் கே.பாக்யராஜ் தான். மாற்று அணியில் இருந்து வெற்றி பெற்ற நிர்வாகிகளையும் அரவணைத்து, அனைவரையும் இணைத்து சங்கத்தின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.