உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாணவர்களின் எதிர்ப்பு : மவுனம் கலைத்த மாதவன்

மாணவர்களின் எதிர்ப்பு : மவுனம் கலைத்த மாதவன்

நீட் தேர்வு வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் பலர் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதேசமயம் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர். மாதவன் நீட் விவகாரம் குறித்தும் மாணவர்கள் போராட்டம் குறித்தும் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார்.

அங்கே படிக்கும் மாணவர்கள் மாதவனின் அலுவலக கதவில் காணவில்லை என்றும், நீட் விற்பனைக்கு உள்ளது என்பது போன்றும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி மாதவனின் அமைதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மவுனம் கலைத்த மாதவன் தனது சோஷியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளில் தானும் பங்கேற்பதாகவும் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் மீது அரசு உடனடியாகவும் உறுதியாகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தற்காலிக தோல்விகளால் வேதனை அடைய வேண்டாம், தங்களின் திறமை மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Balaji
2026-07-24 16:41:11

சூப்பர் மாதவன் சார்