உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வன்முறைக்கு நடுவில் மென்மையான படம் : சூர்யா பட இயக்குனர் வெங்கி அட்லூரி

வன்முறைக்கு நடுவில் மென்மையான படம் : சூர்யா பட இயக்குனர் வெங்கி அட்லூரி

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இதனை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவர் இயக்கிய 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். சுதந்திர தின வெளியீடாக வருகிறது.

படம் பற்றி வெங்கி அட்லூரி கூறியிருப்பதாவது: இது சூர்யாவின் 46வது படம். 'கருப்பு' என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இந்த படம் வருகிறது. கருப்பு படத்தில் அவர் கடவுளாகவே நடித்தார். இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் தலைவன். இந்த தலைகீழ் மாற்றத்தை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகம் இருந்தது உண்மைதான். ஆனால் 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்து விட்டுதான் சூர்யா 'சிங்கம்' படத்தில் நடித்தார். அந்த மாற்றத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறி நிற்பர் சூர்யா. அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும். எனக்கு அது நிறைவேறி இருக்கிறது. வன்முறை தளத்தில் அதிகமான படங்கள் வருகிறது. அதிலிருந்து சற்று விலகி மென்மையான உறவுகளை பேசும் படமாக உருவாகி உள்ளது

இந்த படத்தில் சஞ்சய் விஸ்வநாத் என்ற முன்னாள் துப்பாக்கி சுடும் வீரனாக சூர்யா நடித்திருக்கிறார். பரபரப்பான வாழ்க்கையை விட்டு விலகி தனது குடும்பம்தான் எல்லாம் என்று வாழ்கிறார். அப்போதுதான் அவரது வாழ்க்கையில் காதலாக மமிதா பைஜு நுழைகிறார். அந்த காதல் சஞ்சய் விஸ்வநாத் வாழ்க்கையில் என்னென்ன மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதுதான் படம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !