‛நான் உயிரோடும் இருக்கும் வரை...': ரவிமோகனின் பதிவு வைரல்
நடிகர் ரவிமோகன், மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்து பிரிந்து வாழ்கின்றனர். இந்த விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அத்துடன், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரையில் படங்களில் நடிக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்தார். சில நாட்களுக்கு பிறகு மனம்மாறிய ரவிமோகன், மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். யோகிபாபுவை வைத்து ‛அன் ஆர்டினரி மேன்' படத்தை முதன்முறையாக இயக்கியும் வருகிறார்.
இந்த நிலையில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛எனக்கு மிகவும் பிரியமான மக்களுக்கு இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். உண்மையான நண்பர்களாக என் பக்கபலமாக நிற்பதற்கு நன்றி. சிலர் நீதிமன்ற அவமதிப்புக்கு இணையான வழிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது. என்னை பொறுத்தவரை, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்: நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒரே அறையில் மீண்டும் ஒன்றாக இருக்கவே மாட்டோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
ஆட்டம் போட்ட ரவிமோகன்
அத்துடன், தனது இன்ஸ்டா பக்கத்தில் உற்சாக மிகுதியில் நடனமாடும் வீடியோவும், தன் தந்தை, தாய், அண்ணன் ஆகியோருடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்த ரவிமோகன், ‛நேற்று இரவு என் குடும்பத்தினருக்காக, நான் இயக்குனராக அறிமுகமாகும் அன் ஆர்டினரி மேன் திரைப்படத்தின் சில காட்சிகளையும் அதன் இசையையும் காட்டினேன். என் குடும்பத்தினர், குறிப்பாக என் அப்பா எனக்காக உற்சாகமாக கைதட்டிய அந்த தருணம், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று நான் மனதார பிரார்த்திக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.