உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 75 வயதில் கதை நாயகன்

பிளாஷ்பேக் : 75 வயதில் கதை நாயகன்

அந்தக் காலத்தில் ஸ்டூடியோ வட்டாரங்களில் அதிகம் அறியப்பட்டவர் குப்புசாமி. காலையில் இருந்து இரவு வரை ஸ்டூடியோக்களையே சுற்றிக் கொண்டிருப்பார். எந்த இயக்குநரை கண்டாலும் வாய்ப்பு கேட்பார். 22 வயதில் தொடங்கியது அவரின் இந்த தேடல். சில இயக்குனர்கள் சின்ன சின்ன வேடங்கள் கொடுத்தார்கள். வாய்ப்பு கொடுக்காவிட்டால் சாப்பிட பணம் கேட்பார் 5 ரூபாய் மட்டும் வாங்கிக் கொள்வார்.

எம்ஜிஆர் எப்போது ஸ்டூடியோவுக்குள் வந்தாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று பார்ப்பார். அவரும் கணிசமான ஒரு தொகையை கொடுப்பார். ஒரு நாள் எம்ஜிஆர் ஏம்ப்பா குப்புசாமி, இப்படி ஏன் கிடந்து அலையுறே... ஒரு ஆட்டோ வாங்கித் தர்றேன். அதை ஓட்டி குடும்பத்தை காப்பாத்திக்கோ என்றார். அதற்கு அவர் 'நான் ஒரு நடிகனாத்தான் சாவேன்' என்றார். அதன் பிறகு எம்ஜிஆரும் அதைப் பற்றி கேட்பதில்லை.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதைபோல குப்புசாமிக்கு அவரது 75வது வயதில் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. மாற்று சினிமா இயக்குனராக போற்றப்பட்ட ஜெயபாரதி இயக்கிய 'உச்சி வெயில்' என்ற படத்தின் நாயகன் ஆனார் குப்புசாமி. குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை. இந்த படத்தில் நடித்ததற்கு அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. படத்திற்கு ரமேஷ் வியாஸ் ஒளிப்பதிவு செய்தார், எல். வைத்தியநாதன் இசையமைத்தார்.

ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுத்தனர். பிரசாத் லேப் நிறுவனம் படப்பிடிப்பு கருவிகளை இலவசமாக கொடுத்ததோடு, இலவசமாக பிலிம் பிராசசும் செய்து கொடுத்தது. சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. தற்போது இந்த படத்தின் பிலிம் சுருளோ, நெகட்டிவோ இல்லை. படம் தொடர்பான புகைப்படங்களும் கிடைப்பதில்லை. படம் வெளியான அடுத்த ஆண்டே குப்புசாமி காலமானார். (மேலே உள்ள படத்தில் இருப்பது இயக்குநர் ஜெயபாரதி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !