“ஜி.டி.என் படத்தை மாணவர்கள் பார்க்கணும்'': சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், பிரியாமணி, துஷாரா விஜயன் நடித்த ஜி.டி.என்(ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு) படத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்டோர் பார்த்தனர்.
பின்னர் படம் குறித்து பேசிய சபாநாயகர், ''இன்றைய இளைஞர்களிடையே சுயசார்பு, அறிவு மற்றும் தனித்திறன்களின் முக்கியத்துவத்தை ஜி.டி.நாயுடு எடுத்துரைத்தார். இளைஞர்கள் தங்களுக்கான அறிவையும் திறமைகளையும் தாங்களே வளர்த்துக்கொண்டு, அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தி, வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும் என்று காத்திருக்காமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முறையான கல்வி கற்பதற்கான சூழல் கடினமாக இருந்தபோதிலும், சுயமாகக் கற்றுக்கொண்டு தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணம், விடாமுயற்சி, ஆர்வம் மற்றும் சுயசார்பு ஆகியவற்றால் எத்தகைய சாதனைகளை உருவாக்க முடியும் என்பதற்கான வலிமையான எடுத்துக்காட்டு.
'ஜி.டி.என்' திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு. இந்த திரைப்படம் இன்றைய காலத்தின் தேவை. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 'ஜி.டி.என்' திரைப்படத்தைப் பார்த்து, ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உத்வேகம் பெற வேண்டும் அரசுப் பள்ளி மாணவர்களை 'ஜி.டி.என்' திரைப்படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்க உள்ளேன். இதன் மூலம் ஜி.டி. நாயுடுவின் உத்வேகம் அளிக்கும் வாழ்க்கைக் கதை மாநிலம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையைச் சென்றடைய வேண்டும்'' என்றார்.