சூதாட்ட செயலி வழக்கு : அமலாக்கத்துறை முன் நித்தி அகர்வால் ஆஜர்
இந்தியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகளால் இளைஞர்கள் தவறான பாதைக்கு இழுத்து செல்லப்படுகிறார்கள். ஆனால் இந்த செயலிகளை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரும் தொகையை நடிகர், நடிகைகள் சம்பளமாக பெற்றுள்ளார்கள்.
இதன் காரணமாக இதுவரை 21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி , பிரணிதா , அனன்யா நாகேல்லா, ஸ்ரீ ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷிர்னி சவுந்தரராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அமலாக்கத்துறையில் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், சூதாட்ட செயலி விளம்பர வழக்கு தொடர்பாக நடிகை நித்தி அகர்வால் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நித்தி அகர்வால் 'முன்னா மைக்கேல்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமாகி பின்னர், தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் ஈஸ்வரன், பூமி, கலகத் தலைவன் படங்களில் நடித்தார். கடைசியா 'தி ராஜாசாப்' படத்தில் நடித்தார்.