வளர்ப்பு முறை குறித்து காரசாரமாக மோதிக்கொண்ட கங்கனா, டாப்சி
பாலிவுட் நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் டாப்சி பன்னு இருவருக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பனிப்போர் இருந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது ஒருவர் மற்றவரை நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் தாக்கிப் பேசுவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே இருந்த சலசலப்பு அடங்கியிருந்த நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் டாப்சியிடம் கங்கனா ரணாவத்துடன் இருக்கும் மோதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டாப்சி, கங்கனாவுக்கும் எனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் அதை வெளிப்படுத்தும் முறைகள் எங்களது வளர்ப்பு மற்றும் சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கின்றன. நாங்கள் எப்போதுமே நேரில் சந்தித்துக் கொண்டது இல்லை என்று கூறியிருந்தார்.
டாப்சியின் இந்த வார்த்தைகள் கங்கனாவைக் கோபப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலமாக, வரவிருக்கும் தனது பி கிரேடு திரைப்படத்தை விளம்பரப்படுத்த என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார். என் வளர்ப்பு முறை குறித்தும் பெற்றோர் குறித்தும் பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏன் ஒரு மலிவான நகல் இப்படி எல்லை மீறுகிறது? என்று டாப்சியின் பெயரை குறிப்பிடாமல் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் கங்கனா ரணாவத். இருப்பினும், தான் வெளியிட்ட பதிவுகளைச் சிறிது நேரத்திற்குப் பிறகு தனது சோஷியல் மீடியா பக்கத்திலிருந்து நீக்கியும் விட்டார் கங்கனா.