கார் மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் பவன் கல்யாண் பட ஆர்ட் டைரக்டர் மகன் கைது
தெலுங்கு திரை உலகில் குறிப்பிடத்தக்க கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஆனந்த் சாய். ஆரம்ப காலத்தில் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த 'தொலி பிரேமா' படத்தில் கலை இயக்குனராக அறிமுகமான இவர், அந்த படத்தில் பவன் கல்யாண் தங்கையாக நடித்த வாசுகி என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'உஸ்தாத் பகத்சிங்' வரை பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றும் அளவிற்கு சினிமா மற்றும் அரசியல் ரீதியாக நட்புடன் இருக்கிறார்.
இந்த நிலையில் இவரது இரண்டு மகன்களில் ஒருவரான சந்தீப், கார் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்புக்குக் காரணமானார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோடு ரோட்டரி மற்றும் கச்சா பவுலி செல்லும் சாலையில் உள்ள ஆர்க்கிட் மருத்துவமனைக்கு எதிரே ஒருவர் சாலையைக் கடந்து செல்லும் போது அவர் மீது ஆனந்த் சாயின் மகன் சந்தீப் ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.
கார் நிற்காமல் சென்றுவிட, சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்திலேயே பலியானார். போலீஸ் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அது ஆனந்த் சாயின் மகன் சந்தீப் தான் என்பதை உறுதி செய்து தற்போது, ராயதுர்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்று ஹைதராபாத்தில் விஐபிகளின் வாரிசுகள் கார் மற்றும் பைக் விபத்துக்களை ஏற்படுத்துவது அவ்வப்போது தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.