உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்

பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்


'முன்பே வா என் அன்பே வா', 'மயிலிறகே', 'மெர்சல் அரசன்' உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார் நரேஷ் ஐயர். தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் பாடியுள்ள இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். 45 வயதாகும் நரேஷ் ஐயருக்கு, கடந்த செப்.,13ல் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகள் பற்றிய விபரம் தெரியவில்லை. இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இத்திருமணம் குறித்து அவர் சமூக வலைதளத்தில் எந்த பதிவும் இடவில்லை

மாறாக, ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயில் நிர்வாகம், அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், ''தேசிய விருது பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயரின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இப்பெருமகிழ்ச்சிக்குரிய புதிய வாழ்க்கைப் பயணம் எங்களது திருக்கோயிலில் தொடங்குவதை நாங்கள் பெரும் பேறாகக் கருதுகிறோம். புதிதாக திருமணப் பந்தத்தில் இணைந்துள்ள தம்பதியருக்கு இறைவனின் அருளால் வாழ்நாள் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், வளமும் பெருக வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம். இவர்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளது.

நரேஷ் ஐயரின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருடைய திருமணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !