மீண்டும் பரபரப்பாகும் தமிழ் சினிமா ரிலீஸ்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பின் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அவ்வளவாக வெளியாகவில்லை.
50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதால் பலரும் படங்களை வெளியிடத் தயங்கினார்கள். ஆனால், அதையும் மீறி விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளியானது. பாதி இருக்கைகள்தான் என்றாலும் மக்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியதால் படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
கடந்த மாத பொங்கல் வெளியீடுகளுக்குப் பிறகு நேற்று முதல் தமிழ் சினிமா மீண்டும் பழைய பரபரப்புடன் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. நேற்று 'களத்தில் சந்திப்போம், ட்ரிப், சிதம்பரம் ரயில்வே கேட், ஆட்கள் தேவை' ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன.
அடுத்த வாரம் பிப்ரவரி 12ம் தேதியன்று, “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, கேர் ஆப் காதல், நானும் சிங்கிள்தான், ஏலே” ஆகிய ஐந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அடுத்து பிப்ரவரி 19ம் தேதியன்று விஷால் நடித்துள்ள 'சக்ரா' படம் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அன்றைய தினம் மேலும் சில படங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழையபடி வாராவாரம் நான்கைந்து படங்கள் வரத் தயாராகியுள்ளதால் தமிழ் சினிமா உலகில் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.