உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் விஜய் போல யாரையும் பார்த்ததில்லை - கண்கலங்க கங்கனா பாராட்டு

இயக்குனர் விஜய் போல யாரையும் பார்த்ததில்லை - கண்கலங்க கங்கனா பாராட்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதான் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தின் டிரைலர் வெளியீடு இன்று(மார்ச் 23) சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரணவத், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமி, ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், எடிட்டிர் ஆண்டனி, தயாரிப்பாளர்கள், இயக்குனர் விஜய், படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசும் போது நடிகை கங்கனா ரணவத் உணர்ச்சிவசப்பட்டே பேசினார். ஹிந்தித் திரையுலகத்தை விட தென்னிந்தியத் திரையுலகத்தை தூக்கி வைத்துப் பேசினார்.

“தென்னிந்திய சினிமாவுல குறிப்பாக தமிழ், தெலுங்கில் நெப்போட்டிசம் இல்லை, குரூப்பிசம் இல்லை, கேங்கிசம் இல்லை, ஒருத்தரைப் பத்தி தரக்குறைவா பேசறதில்லை. ரொம்ப ஆதரவா இருந்தாங்க. இங்க இருந்து போவதற்கு எனக்கு மனசே இல்லை. இன்னும் நிறைய படம் இங்க பண்ணணும்னு நினைக்கிறேன்.

படத்தின் இயக்குனர் விஜய் பத்திப் பேச வார்த்தைகளே இல்லை. இந்தப் படத்துக்காக மேக்கப் டெஸ்ட் போட கலிபோர்னியா போயிருக்கும் போது அவர் தண்ணிய மட்டுமே குடிச்சிட்டு வாழ்ந்தாரு. என்ன இவரு வித்தியாசமானவரா இருக்காரேன்னு யோசிச்சேன்.

சரியா சாப்பிட மாட்றாரு, குடிக்க மாட்றாரு, ஷுட்டிங் முடிந்த பிறகு யாரையும் பார்க்க மாட்றாருன்னு நினைச்சேன். ஷுட்டிங் முடிந்த பிறகு எல்லாருமே ஜாலியா உட்கார்ந்து பேசறது வழக்கம் தான்.

என் வாழ்க்கையில இப்படி ஒரு மனிதரை நான் சந்தித்ததேயில்லை. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு. என் திறமையை மதிச்ச ஒரே மனிதர். பொதுவா எல்லாருமே ஹீரோக்கள் கிட்டதான் அப்படி இருப்பாங்க, ஹீரோயின்கள் கிட்ட இருக்க மாட்டாங்க.

ஆனால், அவர் கிட்டதான் ஒரு இயக்குனர் நடிகையை எப்படி டிரீட் பண்ணணும்கறத கத்துக்கிட்டேன். எப்படி ஒருத்தர் கூட அன்பா பழகணும்கறதையும் கத்துக்கிட்டேன்,” என இயக்குனர் விஜய்யைப் பற்றிப் பேசும் போது கண் கலங்கிக் கொண்டே பேசினார்.

மேடைக்கு அருகில் அதை நின்று கொண்டு கேட்ட விஜய்யும் நெகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து மேடைக்குச் சென்று கங்கனாவிடமும் பேசத் தயக்கப்பட்டார். பின்னர் கடைசியாக கங்கனா, விஜய்யிடம் நன்றி தெரிவித்துப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !