காமெடி நடிகர் யோகிபாபு சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தான் நடிக்கும் படங்கள், தனது புகைப்படங்களை அதில் பதிவேற்றி வருவார். அதே நேரத்தில் யோகி பாபு பெயரில் போலி கணக்குகளும் உலா வருகிறது.
யோகிபாபு பெயரில் ஏற்கனவே வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி அரசியல் தலைவர்களை கேலி செய்வதுபோன்று பதிவுகளை வெளியிட்டனர். இதனால் அதிர்ச்சியான யோகிபாபு நான் அவ்வாறு செய்யவில்லை. எனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்குகள் வைத்து இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுகிறார்கள். என்று கூறியிருந்தார். அதன்பிறகு அந்த போலி கணக்கு நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் யோகிபாபு பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு உருவாகி உள்ளது. அதில் யோகிபாபுவின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சர்ச்சை கருத்துக்களும் பதிவிடப்படுகின்றன. இதையடுத்து தற்போது யோகிபாபு அந்த போலி கணக்கை தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இது போலி கணக்கு. இந்த கணக்கை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.