உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கர் - ராம்சரண் படம் நாளை ஆரம்பம்

ஷங்கர் - ராம்சரண் படம் நாளை ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தமிழைத் தவிர ஹிந்தியில் மட்டும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் மட்டுமே படங்களை இயக்க கவனம் செலுத்தி வந்த ஷங்கர் முதல் முறையாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய படத்தை இயக்கப் போகிறார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள இப்படத்தின் பூஜை நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக படத்தின் நாயகி பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹைதராபாத் சென்றுள்ளார்.

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை அப்படியே விட்டுவிட்டு ஷங்கர் இந்தப் படத்தை இயக்கப் போனதால் அதன் தயாரிப்பாளர் லைக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்கள்.

ராம்சரண் படத்தை இயக்கி முடித்துவிட்டு ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை இயக்க வருவாரா அல்லது இடையிடையே வேலைகளை முடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

ஷங்கர் - ராம் சரண் கூட்டணி தெலுங்குத் திரையுலகத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்கள் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ராஜமவுலியை மிஞ்சும் அளவிற்கு ஷங்கரின் இந்தப் புதிய படம் இருக்குமா என பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஷங்கரை தனது அபிமான இயக்குனர் என ராஜமௌலி ஏற்கெனவே சொல்லியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !