கூலி
இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
நடிப்பு : ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாகிர், சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான் மற்றும் பலர்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : கிரிஷ் கங்காதரன்
வெளியான தேதி : ஆகஸ்ட்14, 2025
நேரம் : 2 மணிநேரம் 49 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 14 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட ஷிப்பிங் நிறுவனம் நடத்துகிறார் தொழிலதிபரான நாகர்ஜூனா. அவரின் சட்டவிரோத தொழில்களை கவனிக்கும் விசுவாசியாக இருக்கிறார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் சவுபின் ஷாகிர். விசாகப்பட்டினத்தில் இருக்கும் தனது உயிர் நண்பன் சத்யராஜ் மறைவு செய்தி கேள்விப்பட்டு அங்கே செல்கிறார், சென்னையில் மேன்சன் நடத்தி வரும் ரஜினிகாந்த். அப்போது சத்யராஜ் இயற்கையாக இறக்கவில்லை என ரஜினிக்கு தெரிய வருகிறது. அது குறித்து விசாரிக்க அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன. ஒரு காலத்தில் கூலியாக இருந்த ரஜினிகாந்த் மாறியது ஏன்?, அவருக்கும் நாகார்ஜூனாவுக்கும் என்ன பிரச்னை? சத்யராஜூக்கும், ரஜினிக்குமான நட்பு எப்படிப்பட்டது. நாகார்ஜூனா செய்யும் சட்டவிரோத தொழில் என்ன? என்பதற்கான விடை சொல்கிறது கூலி படத்தின் கதை. அதை ஆக் ஷன், வன்முறை, பழிவாங்கல் கலந்து ரத்தமும், சதையுமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ரஜினியின் 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையில் வரும் படம், பல கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்த படம், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சவுபின் ஷாகிர் போன்ற மற்ற மொழி பிரபல நடிகர்கள் நடித்த படம், ஆயிரம் கோடியை அள்ளப்போகும் முதல் தமிழ் படம் என பில்டப்புடன் வந்தது கூலி. உண்மையில் அதற்கேற்ற விஷயங்கள், சீன்கள் படத்தில் இருக்கிறதா?
இது, பக்கா ரஜினி படமா என்றால் கண்டிப்பாக இல்லை. காரணம் ரஜினி படங்களுக்கே உரிய ஸ்டைல், காமெடி, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் சீன்கள் என எதுவும் இல்லை. படம் முழுக்க வன்முறை, ஆக் ஷன், ரத்தம் தான். படம் தொடங்கி கடைசி வரை யாராவது செத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதுவே சோர்வடைய வைக்கிறது. லோகேஷின் விக்ரம், மாநகரம் படங்களில் இருந்த விறுவிறுப்பு, டுவிஸ்ட் இதில் இல்லை.
தேவா என்ற பெயரில் மேன்சன் நடத்தும் கேரக்டரில் ரஜினி நன்றாக நடித்து இருக்கிறார். குடி தினமும் கொல்லும் என்று அட்வைஸ் செய்து ஒரு அழகான பாடலில் ஆடுகிறார். அப்புறம், ஆக் ஷனில் கலக்குகிறார். குறிப்பாக ஸ்ருதிஹாசன் உடனான எமோஷனல் சீன்கள், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடக்கும் அதிரடி, மேன்சன் சண்டைக்காட்சி மற்றும் கிளைமாக்சில் முத்திரை பதித்து இருக்கிறார். குறிப்பாக, பிளாஷ்பேக் சீன்களில் அவர் நடிப்பும், ஸ்டைலும் செம. அதேசமயம் பல சீன்களில் அவர் சும்மா இருப்பது ஏமாற்றம். தனது 50வது படத்தில் குடிக்கிறார், பீடி பிடிக்கிறார். இதில் பீடியை புகழும் சீன்கள் வேறு. இன்னமுமா நீங்கள் இப்படிப்பட்ட காட்சிளை விடவில்லை.
படத்தின் இன்னொரு பிளஸ் மேக்கப் இல்லாமால், அழுத்தமான நடிப்பை தரும் ஸ்ருதிஹாசன். அவருக்கும் ரஜினிக்குமான, கிளைமாக்ஸ் உருக்கம். இவர்களை தவிர படம் முழுக்க ஸ்கோர் பண்ணுபவர் வில்லத்தனமான வேடத்தில் வரும் சவுபின் ஷாகிர்தான். மோனிகா பாடல் அவர் ஆடுகிற ஆட்டம் அடடா? என்ன, பேச்சில் வரும் மலையாள வாடையை தவிர்த்து இருக்கலாம்.
மெயின் வில்லனாக வரும் தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனா சில இடங்களில் மனதில் நிற்கிறார். ஆனால், அவரின் இமேஜ், நடிப்பு வில்லத்தனத்துக்கு செட்டாகவில்லை. கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சியில் சில சீன்கள் வந்து எதிரிகளை துவம்சம் செய்கிறார் கன்னட ஹீரோ உபேந்திரா. கிளைமாக்சில் ஏகப்பட்ட பில்டப்புடன் இன்னொரு பெரிய தாதாவாக வருகிறார் அமீர்கான். அவர் ஏதோ செய்யப்போகிறார் என நினைத்தால் ஏமாற்றமே. சத்யராஜூக்கும் சில சீன்கள், சில வசனங்கள், அவ்வளவுதான் டக்கென செத்து போய்விடுகிறார். இவர்களை தவிர, நாகார்ஜூனா மகனாக வரும் கண்ணா ரவி, அவர் காதலியாக வரும் ரச்சிதாராம் நடிப்பு ஓகே. இன்னும் சார்லி, காளி வெங்கட் உள்ளிட்ட நிறைய நடிகர்கள் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை.
அனிருத்தின் இசையில் மோனிகா பாடல் மட்டுமே ரசிக்க வைக்கிறது. பின்னணி ஓகே. அதிலும் கர்நாடக சங்கீதம் பின்னணியிலான அந்த மேன்சன் சண்டைக்காட்சி மட்டுமே காட்சியை ஸ்பீடு ஆக்கிறது. தங்கமகனில் வரும் வா வா பக்கம் வா இளையராஜா பாடல், கல்லுாரி வாசல் படத்தில் வரும் தேவாவின் லயோலோ கல்லுாரி மிக்சில் வரும் பின்னணி இசை புதுமை.
சண்டைக்காட்சிகளில் கேமராமேன் கிரிஷ் கங்காதரன் வொர்க் ஓகே. பிளாஷ்பேக் காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் சதீஷ், கிராபிக்ஸ் டீம் வொர்க் அருமை. இன்னும் கை தட்டல் வாங்கும்படி சண்டைகாட்சிகளை அமைத்து இருக்கலாம் அன்பறிவ்.
படம் முழுக்க யாராவது கொடூரமாக கொலை செய்யப்படுவதும், ரத்தம் கொட்டி சாவதும் லோகேசுக்கு பிடித்தமாக இருக்கலாம். படம் பார்க்க வருபவர்களை நோகடிக்க வைக்கிறது. நல்லவேளை ஏ சான்றிதழ் என்பதால் 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது. தங்க கடத்தல், காஸ்ட்லி வாட்ச், எரிக்கும் மிஷின், டைம் டிராவல் என பல எதிர்பார்ப்புகளுடன் வந்தால் இதயம் கடத்தும் கதை என பல படங்களில் பார்த்த உடல் உறுப்பு கடத்தலை மையமாக வைத்து ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர். அதிலும் வில்லன், ஹீரோ மோதலில் சுவாரஸ்யம் இல்லை. இவ்வளவு பெரிய கடத்தல் கதையில் போலீஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வேலை இல்லை. இன்டர்நேஷனல் தாதா என்ற பில்டப் தனி. நட்பை சொல்லும் படத்தில் அதற்கான காட்சிகள் அழுத்தமாக இருக்க வேண்டாமா? அதை தேடி பார்க்க வேண்டியது இருக்கிறது. இடைவேளை காட்சியும், கடைசி 20 நிமிட காட்சிகளும் தான் லோகேஷின் பிளான் ஒர்க்-அவுட் ஆகி உள்ளது.
கூலி - ரசிகர்களை மட்டுமல்ல, ரஜினியை கூட ஏமாத்திட்டீங்களே லோகேஷ்