சாத்தான் தி டார்க்
தயாரிப்பு : இபிஎஸ் பிக்சர்ஸ்
இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம்
நடிப்பு : எப்.ஜே, ஐரா, மோனா, சாந்தினி, எட்வர்டு
ஒளிப்பதிவு : பாலா ஜி. ராமசாமி
இசை : அஷ்வின் கிருஷ்ணா
வெளியான தேதி : மார்ச் 27, 2026
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
அஸ்தினாபுரம் என்ற மலை கிராமத்தில் கிறிஸ்தவ மதத்தை வழிபடும் மக்கள் அதிகம். அதே ஊரில் ஒரு சிலர் காக்கை வடிவில் இருக்கும் சாத்தானையும் வழிபடுகிறார்கள். சாத்தான் வழிப்பாட்டில் ஈடுபடுபவர்கள் சிலசமயம் நரபலி கொடுக்கிறார்கள், தங்களையே வருத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த மோனாவுக்கு இரண்டு மகள்கள். அந்த ஊரின் பாதிரியார் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். மோனாவின் வித்தியாசமான நடவடிக்கைகைளை பார்த்து அவரின் மகள் ஐரா பயப்படுகிறார். ஊரில் இன்னும் சில உயிர் பலிகள் நடக்க, இன்ஸ்பெக்டர் எட்வர்டு விசாரிக்கிறார். அப்போது சாத்தான் வழிபாடு, நரபலி உள்ளிட்ட விஷயங்கள் தெரிய வருகிறது. இதற்கு பின்னால் சாந்தினி இருப்பது தெரிய வருகிறது. சாந்தினி யார்? அவருக்கும், மோனாவுக்கும் என்ன தொடர்பு, இறை நம்பிக்கையுள்ள சாந்தினி சாத்தான் பக்கம் போனது ஏன்? ஊரில் அடுத்து என்ன நடக்கிறது என்பது சாத்தான் தி டார்க் கதை.
பள்ளி மாணவி மோனாவின் தினசரி வாழ்க்கை, அவர் அம்மாவின் மாறுபட்ட செயல்பாடுகள், ஊர் மக்கள் அவர்களை சந்தேகப்படுவது என படம் தொடங்குகிறது. முதலில் இது பேய் படமோ என்ற மாதிரியான டோன் வருகிறது. அந்த அளவுக்கு சின்ன, சின்ன செயல்களால் மிரட்டியிருக்கிறார் மோனா. குறிப்பாக, அந்த வீட்டுக்குள் நடக்கும் சில விஷயங்கள், சவுண்டு, கேமரா கோணம் பயத்தை வரவழைக்கிறது. திடீரென குரல் மாறுவது, மிரட்டுவது, காதை, நாக்கை அறுப்பது பல இடங்களில் நடிப்பில் கலக்கியிருக்கிறார் மோனா. அவரின் வாய்ஸ் மாடுலேசனும் இன்னும் பயத்தை வரவழைக்கிறது.
அம்மா மீதான பாசம், அவரை பார்த்து பயப்படுவது, வாய் பேச முடியாத தங்கையை பாதுகாப்பது, ஊரார் கோபத்தை சமாளிப்பது, தானே ஒரு கட்டத்தில் வேறு மாதிரி ஆவது என ஐராவும் தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார். அவரின் காதலனாக வரும் எப்.ஜேவும் இடைவேளைக்குபின் ஒரு காட்சியில் பயத்தில் அலற வைக்கிறார். இவர்களை தவிர, பாதர் ஆக வருபவர், மதராக வரும் ஸ்ரீஜா ரவியும் மனதில் நிற்கிறார்கள். இடைவேளைக்குபின் வரும் சாந்தினி தன் பங்கிற்கு கலக்கியிருக்கிறார். இறை நம்பிக்கையில் இருந்து அவர் எப்படி சாத்தான் பக்கம் மாறுகிறார், பின்னர் என்னென்ன செய்கிறார் என்பது பயம் கலந்த விறுவிறுப்பு, இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக வரும் எட்வர்டும் மனதில் நிற்கிறார்
சாத்தான் வழிபாடு, அவர்களின் சடங்குகள், அதனால் கிராமத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை புதிதாக இருக்கிறது. படத்தின் முதற்பாதி கதை சொல்லல், சில அமானுஷ்ய சம்பவங்கள், மோனாவின் குடும்பம், ஊர் மக்கள் பயம் என திரைக்கதை செம. அந்த மலைவாழ் கிராமத்தை, சாத்தான் பயத்தை அழுத்தமாக காண்பித்து இருக்கிறது பாலா ஒளிப்பதிவு, இசையும் மிரட்டல். அட, கதை வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் நிறைய சறுக்கல். போலீஸ் விசாரணை, சாத்தான் வழிபாடு பின்னணி, சாந்தினி கேரக்டர் ஓகே. ஆனால், முதற்பாதியில் உள்ள நிறைவு அதில் இல்லை. மீண்டும் மீண்டும் ஒருவித மனபிறழ்வு சீன்கள், பயம், ஓவர் சவுண்டு சலிப்பை தருகிறது.
நிறைய ஹாலிவுட் படங்களின் பார்த்த சாத்தான் வழிபாடு, அதன் பாதிப்பை தமிழில் தந்து இருக்கிறார் இயக்குனர். அதை மாறுபட்ட கதையாகவும் கொடுத்து இருக்கிறார். ஆனால், இடைவேளைக்குபின் குழப்பி, எப்படி முடிப்பது என தெரியாமல் சீன்களை இழுத்து, பார்வையாளர்களை திணற வைக்கிறார். சரி, ஏதோ செய்யப் போகிறார்கள். சாத்தானை எப்படியோ அழிக்கப் போகிறார்களா என நினைத்தால் டக்கென படத்தை முடித்து, அடுத்த பாகத்தில் பாருங்கள் என்கிறார் இயக்குனர். அது பெரிய ஏமாற்றம். இப்படிப்பட்ட கதைகளின் முடிவை இன்னும் எத்தனை காலம் கழித்து பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் படம் ஒருவித பெரிய ஏமாற்றத்தை தருகிறது
சாத்தான் தி டார்க் - நல்ல ஓபனிங், அப்புறம் சுமார், கடைசியில் சொதப்பல்