அச்சன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :2134 days ago
தென்காசி: கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ் விழாவிற்காக நேற்று முன்தினம் புனலுார் அரசு கருவூலத்தில் இருந்த ஐயப்பனின் ஆபரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்தன. 10 நாட்கள் நடக்கும் விழாவில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 9ம் திருநாளான டிச. 25ல் தேரோட்டமும் 10ம் திருநாளான டிச.26ல் ஆராட்டு விழாவும் டிச.27ல் மண்டல பூஜையும் நடக்கிறது.