மார்கழி பஜனை: சிறுவர்கள் பக்தி பரவசம்
ஆனைமலை: ஆனைமலை அடுத்த தென்சங்கம்பாளையம் பகுதியில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு, சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர்.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம், அதிகாலையில் எழுந்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி, இறைவனை வழிபடுவது வழக்கம். மார்கழி துவங்கியதால், தமிழகம் முழுவதிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, உலகநல வேள்விக்குழு, நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மற்றும் மக்கள், ஆனைமலை, கோட்டூர், தென்சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார் உள்ளிட்ட பகுதிகளில், மார்கழி பஜனை பாடி, ஊர்வலமாக செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், திருப்பாவை, திருவெம்பாவை பாடியும், பக்திப்பாடல்கள் பாடியும், பஜனை ஊர்வலம் நடத்துகின்றனர்.நேற்று, தென்சங்கம்பாளையம் கிராமத்தில், உலக நல வேள்விக்குழுவினர், சிறப்பாக பஜனை பாடி ஊர்வலம் சென்றனர். சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடினர்.