ராமேஸ்வரம் கோயிலில் அக்னி தீர்த்த நடை பாதை சேதம்: பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை நடைபாதை சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்வர்.ஆனால் அக்னி தீர்த்த கடற்கரையில் கழிவு துணிகள், கடல் பாசிகள் ஒதுங்கியதால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.
இந்நிலையில், அக்னி தீர்த்த கடற்கரையை அழகுப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.20 லட்சம் சுற்றுலா நிதியில் கடற்கரையில் சிமென்ட் சிலாப் கல்லில் நடை பாதை அமைத்தனர். இந்த நடை பாதை கட்டுமானம் தரமின்றி இருப்பதாக, பணி நடக்கும் போதே இந்து அமைப்பினர் புகார் அளித்தனர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தரமின்றி நடை பாதை அமைத்ததால், தற்போது கடல் அலையில் நடை பாதை சேதம் அடைந்து பள்ளமாகியது. இப்பள்ளத்தில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி சேதமடைந்த நடை பாதையை சீரமைக்க கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட வேண்டும்.