உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறவஞ்சி நீராடிய நதிகள்

குறவஞ்சி நீராடிய நதிகள்

செகன்மோகினி எனும் அழகிய இளம்மங்கை, உலா வந்த ஈசன் கும்பேசரைக் கண்டு  மையல் கொள்கிறாள். அவரை அடையும் வழி அறியாது தவிக்கிறாள். அச்சமயம்
ஒரு மலைக்குறத்தி அங்கு வர, இவள் நமக்கு நல்லகுறி சொல்லுவாள் என எண்ணிய  செகன் மோகினி, அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிய முற்படுகிறாள்.

தாம் பாவங்கள் தொலைவதற்காக மக்கள் சென்று நீராடும் கங்கை முதலான புண்ணிய  நதிகள் அனைத்தையும் நீ பார்த்திருக்கின்றாய் அல்லவோ? அவற்றைப் பற்றி எனக்குக்  கூறுவாயாக!” என அவள் கண்ட நதிகளைப் பற்றியும் வினவுகிறாள் செகன் மோகினி.

பண்ணிய பாவந் தீரப் பகிரதி முதனீராடும்
புண்ணிய நதிக ளெல்லாம் பொருந்தவே யுரைசெய் வாயே

குறத்தியும் சுவை குறையாமல் விளக்கத் தொடங்கினாள்.

""மான் போலும் இளம்பெண்ணே! நான் சென்று நீராடிய நதிகளைப் பற்றிக் கூறுகிறேன்.  கேட்டுக் கொள்வாய்” என்பவள், செகன்மோகினியின் உள்ளக் கருத்தை அறிந்தவள்  ஆதலால், அவள் மனத்தை மகிழ்விக்க முதலில் கூறுகிறாள்: வானவர்கள் எல்லாம்  பணிந்தேத்தும் ஈசன் கும்பநாதரின் செஞ்சடையில், மகுடம் போலத் தவழ்கின்ற நதியும், விண்ணை நிறைத்ததுமான பரந்த கங்கை நதியே முதலில் நான் நீராடிய நதியாகும்”  என்று செகன் மோகினியின் உள்ளம் குளிரவும், கேட்கும் அவள் கன்னங்கள் சிவக்கவும்  கும்பேசரின் புகழையும் சேர்த்துக் கூறுகிறாள்.

நானாடிய புண்ணிய நதி நதஞ் சொல்லக்கேள்
மானார்க் கரசே என்மதி மானே
வானோர் பணிகும்பநாதர் செஞ்சடை
மகுடங்கள் தவழ்கின்ற ககனங்கள் நிறைகங்கை
(நானாடிய)

ஆர்வம் மிகுகிறது தலைவிக்கு! அடடே! இவள் மிகுதியான ஊர்களையும் தலங்களையும்  கண்டு பல புண்ணிய நதிகளில் நீராடியவள் என்றறிந்து கொண்டு, இன்னும் எங்கெல்லாம் சென்றாய்? என்னவெல்லாம் கண்டாய்? விரைந்து கூறுவாயாக ” என அவசரப்படுத்துகிறாள் செகன்மோகினி. குறத்தியின் உற்சாகத்தில் பல நதிகளின்  பட்டியல் அவள் வாய்க்கு வந்தபடி, வரிசைக்கிரமமாக இல்லாமல் குதித்தோடி வரு கின்றன. இரண்டாம் முறையாகவும் கூறப்படுகின்றன.

""மணம் நிறைந்த மலர்களைக் கரைதனில் கொண்ட கோதாவரி நதி; பஞ்ச நதி எனப் படும் திருவையாற்றுக் காவிரி நதி; அழகாக நளினமான காட்சிகள் அருகில் எங்கும்  மிளிரும் துங்க நதி; துறைகள் எங்கும் முத்தும் மணிகளும் தங்கியுள்ள பம்பா நதி;  வழிபடத்தக்க ஆம்ப்ரவதி, சொர்ணமுகி, சிந்து ஆகிய நதிகள் இன்னும் சில ” என்கிறாள்  குறமகள்.

நறைதங்கு நதி கோதாவிரிபஞ்சநதியும்
நளினங்க ளருகெங்கு மிகுதுங்க நதியும்
துறையெங்கு மணிதங்கு நதிபம்பை நதியும்
துதியாம்ப்ரவதி சொர்ண முகிசிந்து நதியும்
(நானாடிய)

செகன்மோகினிக்கு மிகுந்த ஆச்சரியம்! எங்கெல்லாம் சென்று, என்னவெல்லாம் கண்டு  வந்துள்ளாள் இவள்; சாமானியமானவளல்ல எனும் எண்ணம் உறுதிப்படுகின்றது.

""அப்புறம் இன்னும் என்ன நதியெல்லாம் கண்டாய்?” எனக் கேட்கிறாள்.

""அழகான மேகங்களைத் தோற்றுவிக்கும் கன்னி நதியான குமரியாறு, சந்திரபாகா நதி,  அலைகளைக் கொண்ட பம்பு நதி, தாம்ப்ரவதி எனும் தாமிரவருணி நதி, நர்மதை நதி,  மணிகர்ணி நதி எனப்படும் நதி, பொன்னியாகிய காவிரி, சங்கமுகம், மடுக்களில் நொங்குநுரை பொங்கி வழியும் கம்பை நதி ஆகியவை நான் நீராடிய நதிகளில் இன்னும்  சிலவாகும்” எனக் கூறி செகன்மோகினியை மேலும் வியப்பிலாழ்த்துகிறாள் குறத்தி.

அணிகொண்டல் சொரிகன்னி நதிசந்த்ர நதியும்
அலைபம்பு நதிதாம்ப்ர வதிநரும தையும்
மணிகர்ணி நதிபொன்னி மகிழ்சங்க முகமும்
மடுநொங்கு நுரைபொங்கி வழிகம்பை நதியும்
(நானாடிய)

செகன்மோகினியின் ஆர்வம் பலமடங்கு அதிகரிக்க அவள் குறத்தியிடம் தனக்குண்டான வேலையையே மறந்துபோய், ""இன்னும் நீ கண்ட நதிகளைப் பற்றிக் கூறுவாய்” எனக்  கேட்கிறாள்.

குறத்தியும் சொல்கிறாள்: ""தேவர்கள் வந்து முழுகி நீராடும் கருடமங்கை எனும் நதி, நீராடி ஆடைகளைத் துவைத்துக்கொள்ளுமாறு பெரும்பாறாங்கற்களை உடைய துங்க  நதி, பலவிதமான விரதங்கள் இருந்து நீராடினால் பலன்கள் கிட்டும் நதிகள் பல, வேகமாக ஓடும் சுழல்கள் நிறைந்த காட்டாறுகள் என மிகுதியான நதிகளை நான் கண்டு  வந்திருக்கிறேன்.... ரதி போலும் அழகான பெண்ணே!” என்று பற்களைக் காட்டிப்  புன்னகைக்கிறாள்குறத்தி!

சுரர்வந்து முழுகுங்க ருடமங்கை நதியே
துவை யுங்கை விரலுங்கல் பொருதுங்க நதியே
விரதங்கள் சபலன்தந் திடுமங்கு நதியே
விசைகொண்ட நதிசங்க மிகவுண்டு ரதியே (நானாடிய)

இப்போது செகன்மோகினி மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, குறத்தியிடம் குறி கேட்டாள்.  அவளும் செகன்மோகினியின் கரம் பார்த்து நல்ல குறி சொல்லி, பல பரிசுகள் பெற்றுச்  சென்றாள் எனக் கூறவும் வேண்டுமோ? இது பாபவிநாச முதலியார் இயற்றியுள்ள, கும்பேசர் குறவஞ்சி எனும் நூலில் காணும்  கவிதை நயங்கள். ஊர்கள், திருத்தலங்கள், மலைகள், பாரத தேசமெங்கும் உள்ள நதிகள் எனப்  பலவற்றையும் தமது அழகான, கும்பேசர் குறவஞ்சி எனும் நூல் மூலம் குறவஞ்சியின்  வாய்மொழியாகவே எடுத்துக்கூறும் அர்த்தம் பொதிந்த, நயமிகுந்த பாடல்கள்  பலகொண்டு பொலியும் நூல் இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !