விநாயகர் சதுர்த்தி விழா: நாடு முழுதும் கோலாகலம்
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுதும், இன்று(ஆக.,22) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தொற்று பரவல் காரணமாக, பொது இடங்களில், விநாயகர் சிலைகள் வைக்க, அரசு தடை விதித்துள்ளதால், ஆரவாரம் இன்றி, இவ்விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், வீடுகளின் முன் சிலைகளை வைக்கவும், வீட்டு பிள்ளையாரை, நீர்நிலைகளில் கரைக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுதும், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வீதிகள் தோறும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, தினசரி பூஜைகள் செய்யப்படும். சதுர்த்தி முடிந்து, ஒரு வாரத்திற்குள், அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
கொரோனா பரவல்: இதற்காக, பல விதங்களில், பிரமாண்டமான விநாயகர் சிலைகள் செய்யப்படுவதும் உண்டு. இந்த ஆண்டு, விழாவை வழக்கம் போல கொண்டாட முடியாத அளவுக்கு, கொரோனா பரவல், தடை ஏற்படுத்தி விட்டது. பொது இடங்களில், மக்கள் கூடுவதற்கு தடைஉத்தரவு இருப்பதால், பொது வெளிகளில் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும், அரசு தடை விதித்துள்ளது. அதனால், வழக்கமான ஆரவாரம் இன்றி, அமைதியாக இன்றைய கொண்டாட்டம் அமைய உள்ளது.
அரசுக்கு கோரிக்கை: இதற்கிடையில், சிலைகள் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மத ரீதியான மரபை மாற்றக் கூடாது என்று, ஹிந்து அமைப்புகளும், பொது மக்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் வாயிலாக, வீடுகள் முன் சிலைகள் வைக்கவும், வீட்டு பிள்ளையாரை, கடலில் கரைப்பதற்கும், அனுமதி கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இல.கணபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும், அரசு தடை விதித்துள்ளது. அரசின் உத்தரவு, ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.
சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, சமூக இடைவெளியை பின்பற்றி, வழிபட அனுமதிக்கலாம். அரசு உத்தரவை ரத்து செய்து, சமூக இடைவெளியை பின்பற்றி சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு உத்தரவை எதிர்த்து, சிவசேனா தலைவர் ஜி.ராதாகிருஷ்ணனும் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.
ஹிந்து முன்னணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது: நாங்கள், ஊர்வலம் நடத்தப் போவதில்லை. பல ஆண்டுகளாக பின்பற்றும் மத நிகழ்வுகளை நடத்த, தனி நபர்களை அனுமதிக்க வேண்டும். தடை இல்லைவீடுகள், கோவில்கள் முன் சிலைகளை வைக்கவும், நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும். எங்கள் அமைப்பு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, தனி நபர் வழிபாடுகளுக்கு தடை இல்லை. ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம். தமிழக அரசின் உத்தரவு செல்லும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது, என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில், விரிவான நிவாரணம் கோரப்பட்டிருந்தாலும், பெரிய அளவில் ஊர்வலங்கள், சிலைகள் கரைப்புக்கு வழக்கறிஞர்கள் வலியுறுத்தவில்லை. மத சடங்குகளை, தனி நபர்கள் நிறைவேற்ற அனுமதிக்கும்படி, அவர்கள் கோரினர்.
தற்போது, ஊரடங்கு நிபந்தனைகளில் பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது. வீடுகள், கோவில்கள் முன் சிலைகளை வைத்து, நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று, தனி நபர்கள் கரைப்பதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையோ, நோய் தொற்று சூழ்நிலையோ ஏற்படாது. தனி நபர்கள் தான் சிலைகளை கரைக்கச் செல்கின்றனர்; எந்த அமைப்பும் அல்ல. குறிப்பிட்ட இடத்தில், மக்கள் பெருமளவு கூடுவதாலும், அங்கு தங்குவதாலும், நோய் தொற்று பரவல் ஏற்படும். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலை இங்கு இல்லை. சிலைகளை கரைக்க, கூட்டமாக அனுமதிக்கப்படுவது இல்லை.
தனி நபர்கள், குடும்பத்தினர், நீர்நிலைகளுக்கு சென்று கரைத்த பின், திரும்பி விடுவர்.மேலும், கால வரம்பு, சமூக இடைவெளி நிபந்தனைகளும் உள்ளன. தயாரிக்கப்பட்ட சிலைகள், சதுர்த்தி பண்டிகையின் போது மட்டுமே பயன்படுத்தப்படும். களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள், நீண்ட காலம் இருக்காது. சிலைகளை தயாரித்தவர்களுக்கும் இழப்பு ஏற்படும்; அவர்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, வீடுகள் முன் சிலைகளை வைக்கவும், கோவில் நுழைவுவாயிலில் வைக்கவும், தனி நபர்களை அனுமதிக்க வேண்டும்.
சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்கு, தனி நபர்களை அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளி, கால வரம்பு பின்பற்றப்பட வேண்டும். இந்த அனுமதி, தனி நபர்களுக்கு மட்டுமே; அமைப்புகள் எவற்றுக்கும், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. சென்னை, சாந்தோம் பகுதியில் இருந்து, நேப்பியார் பாலம் வரை, கடற்கரையில் சிலைகளை கரைக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மீறுபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.