அருவங்காடு லைன் மாரியம்மன் விழா நாளை துவக்கம்
குன்னூர் :அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள லைன் மாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா நாளை துவங்குகிறது.அருவங்காடு லைன் மாரியம்மன் கோவிலின் 59வது ஆண்டு கரக உற்சவ விழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 4.00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 7.00 மணிக்கு கார்டைட் தொழிற்சாலை பொது மேலாளர் அனில்குமார், கொடியேற்றி விழாவை துவக்கி வைக்கிறார். பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 2.00 மணிக்கு அம்மன் கும்பம் அலங்கரிக்க புறப்படுவார்; இரவு 7.00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை 7.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மதியம் 3.00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7.00 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நடக்கின்றன. 20ம் தேதி காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காலை 10.00 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடக்கின்றன. மதியம் 1.30 மணிக்கு பூ குண்டம் இறங்குதலை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். மாலை 6.00 மணிக்கு மேள தாளம், தாரை தப்பட்டடை முழங்க அம்மன் கங்கைக்கு அழைத்து செல்லப்படுவார். வரும் 21ம் தேதி காலை 8.00 மணிக்கு மஞ்சள் நீராடல் நடக்கும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.