விநாயகர் கோவிலுக்கு பூஜை பொருள்: முஸ்லிம் இளைஞர்களின் நல்லிணக்கம்
ADDED :2168 days ago
கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் கோவிலுக்கு, இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருள் வழங்கினர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அஸ்லம், இஸ்லாமிய இளைஞர்கள், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஆண்டு தோறும் பூஜை பொருட்கள் வழங்கி, பூஜையில் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு கொரோனா பரவலால், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள, வரசித்தி விநாயகர் கோவிலுக்கு, நேற்று பூஜை பொருட்கள் வழங்கினர். தொடர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், இஸ்லாமிய இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.