திருப்பதி லட்டு இனி சணல் பைகளில் மட்டுமே!
திருமலை, திருப்பதி என்றாலே பிரசாதமான லட்டு மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு பக்தரும் நிறைய லட்டுகள் வாங்கிக் கொண்டு வந்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுப்பர். பக்தர்கள் வாங்கும் லட்டுகளை சுமந்து செல்ல கோவில் நிர்வாகமே குறைந்த அளவு தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளையும் விற்றுவந்தது.
பிளாஸ்டிக் உபயோகத்தை தீவிரமாக குறைத்துவரும் திருமலை கோவில் நிர்வாகம், குறைந்த அளவே என்றாலும் தீமை செய்யும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வழி தேடிக்கொண்டு இருந்தது.இந்த நிலையில்தான் இந்திய சணல் தயாரிப்பு நிறுவனம் லட்டுகளின் தரத்திற்கு சேதம் விளைவிக்காத சணல் பைகளை வழங்கியது. இந்த சணல் பைகளை மக்கள் உபயோகத்திற்கு கொடுத்து பார்த்த போது நல்ல வரவேற்பு ஏற்படவே இப்போது பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட்டு முழுவதும் சணல் பைகளே வழங்கப்படுகிறது. லட்டை வாங்கும் பக்தர்கள் விருப்பப்பட்டால் இந்த சணல் பைகளை வாங்கிக் கொள்ளலாம்.இதன் விலை 25 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரை உள்ளது.25 ரூபாய் பையில் ஐந்து லட்டுகளும் 55 ரூபாய் பையில் 25 லட்டுகளும் வைத்து எடுத்துச் செல்லலாம்.