திருப்பதி மலைப்பாதையில் பழைய வாகனங்களுக்கு அனுமதி இல்லை
திருப்பதி: திருமலை மலைப்பாதையில் பயணிக்க, 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு இனி அனுமதியில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கூடுதல் எஸ்.பி., முனிராமய்யா நேற்று கூறியதாவது:திருமலையில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக, திருமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, மலைப் பாதையில் வாகனங்கள் செல்லாததால், திருமலையில் பசுமையான சூழ்நிலை நிலவியது. அதைத்தொடர்ந்து பராமரிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.எனவே இனி, 10 ஆண்டுகள் கடந்த வாகனங்கள், தகுதி சான்றிதழ் இல்லாத வாகனங்கள் திருமலை மலைப் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதாவது, 2010ம் ஆண்டிற்கு முன்பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இதில் அடங்கும். திருமலைக்கு வரும் பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.