தீபாவளி கொண்டாட்டம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தீபாவளி பண்டிகையையொட்டி, அனைத்து கோவில்களிலும், காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாடையுடன் சென்று ஸ்வாமியை வழிபட்டனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால், அதிகாலையில் எழுந்த மக்கள் எண்ணை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டதை காண முடிந்தது. ஒருவருக்கொருவர் ஜாதி, மத பேதமின்றி இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பட்டாசு சத்தம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது. சேலத்தில், கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், எல்லைப்பிடாரி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்டவற்றில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு லட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தீபாவளி மட்டுமின்றி, அமாவாசை நாள் என்பதாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமியை தரிசித்தனர். தீபாவளியையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைணவ திருக்கோவில்களில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.