திருவண்ணாமலை தீப திருவிழா: சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீப திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கடந்த, 20ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. கடந்த, 29ல், மஹா தீபம் ஏற்றும் விழா நடந்தது. தொடர்ந்து, மூன்று நாட்களாக தெப்ப உற்சவம் நடந்து வந்த நிலையில், நேற்று நிறைவு விழாவான, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இதில் நேற்று இரவு, 7:00 மணிக்கு, சண்டிகேஸ்வரர் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின்னர் மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின்னர், பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.