வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய கொடிமரம்
வடலூர்; வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் தருமச்சாலை மூலம், சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்படுகிறது. இங்கு வள்ளலார் வருவிக்கவுற்ற நாள், தருமச்சாலை துவக்க நாள், தைப்பூசம் ஆகிய விழா காலங்களில் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு, விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த தி.மு.க., ஆட்சியில் தருமச்சாலை பகுதியில் உள்ள பழைய கொடி மரம் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சத்திய ஞான சபை அருகே உள்ள பழைய கொடிமரம் அகற்றும் பணிகள் நடந்தன. இதையடுத்து தற்போது அதே பகுதியில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. கொடிமரம் அமைப்பதற்காக சபை அருகே பள்ளம் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கும் பணிகள், கொடிமரம் தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. வள்ளலாருக்கு சத்திய ஞான சபை மற்றும், பெருவெளி அமைக்க இடம் தந்த பார்வதிபுரம் கிராம மக்கள், கொடிமரம் அமைப்பதற்காக நிதி திரட்டி தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்திய ஞான சபையில் விரைவில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என, சன்மார்க்க அன்பர்கள் தெரிவித்தனர்.