உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சிக்கந்தர்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

மதுரை சிக்கந்தர்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

மதுரை; சிக்கந்தர்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் கலந்துகொண்ட முஸ்லிம்களுக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி கோவில் நிர்வாகம் மரியாதை செலுத்தியது. 


மதுரை, சிக்கந்தர்சாவடி கிராமம் இந்து - இஸ்லாமியர்கள் இணைந்து வாழும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றது. இங்குள்ள மந்தையம்மன் கோவில், காளியம்மன், பத்ரகாளியம்மன், முனியாண்டி கோயில் உற்சவ விழா திருவிழாவின் போது  இந்துக்கள் அங்குள்ள சிக்கந்தர் தர்ஹாவிலும், இஸ்லாமியர்கள் கோவிலுக்கும் சென்றும் வழிபாடு நடத்தி சமூக நல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெறும். மேலும் அங்குள்ள இந்து சமூக குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு  சிக்கந்தர் அவுலியா நினைவாக சிக்கந்தர் என்ற பெயரை சூட்டும் வழக்கமும் இருந்துவருகிறது. இந்நிலையில் சிக்கந்தர்சாவடி கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


முன்னதாக கிராமத்தின் 7 கரைகளை சேர்ந்தவர்களுக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கரைகாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் சார்பில் பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை அளிக்கப்பட்டது.  கும்பாபிஷேக விழாவில் சிக்கந்தர்சாவடி பகுதியை சுற்றுவட்டார பகுதி மக்களும் பங்கேற்ற நிலையில் சிக்கந்தர்சாவடி கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக பங்கேற்று கோவிலுக்கு மாலை உள்ளிட்ட அபிஷேக பொருட்களை வழங்கினர். சமூக நல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிக்கந்தர்சாவடி கிராமம் தனது சமூக நல்லிணக்க அடையாளத்தை என்றென்றும் நினைவூட்டிகொண்டே இருக்கும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !