அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு
ADDED :1913 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, சனி மகா பிரதோஷ பூஜை வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, சனி மகா பிரதோஷம் நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள சிறிய நந்தி, அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்டவற்றிற்கு, பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இன்று(13), குபேர கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நேற்று பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள், கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.