சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
ADDED :2089 days ago
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வரும், 30ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை கொடி மரத்தில், உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடியேற்றினார். தீபாராதனை முடிந்து, பல்வேறு பூஜைகள் நடந்தன.தினமும் நடக்கும் பூஜையையொட்டி, 28ம் தேதி மாலை தங்க ரதத்தில் சாமி பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். தேர் திருவிழா, 29ம் தேதி நடக்கிறது. வரும், 30ம் தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர், திருவாபரண அலங்காரம், மதியம், 3:00 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. ஜனவரி, 1ம் இரவு கோவில் ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.