தாந்தோணிமலையில் பகவதியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பரவசம்
ADDED :4894 days ago
கரூர்: கரூர் அருகே தாந்தோணிமலை பகவதியம்மன் கோவிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோவில் மற்றும் பகவதியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 20 ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. கடந்த 25 ம் தேதி பூச்சொரிதல், 27 ம் தேதி அமராவதி ஆற்றில் இருந்து கரகம் ஊர்வலம் ஆகியவை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி கொண்டு பூக்குழியில் பயபக்தியுடன் இறங்கினர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர்ப்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.